புதியவன்
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டில்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. ஜெய்பூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற டில்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பாட்டத்துக்கு வந்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
ராஜஸ்தான் அணியின் ஆரம்ப வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7 பந்துகளில் 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ஜாஸ் பட்லர் 16 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த அணித்தலைவர் சஞ்சு சாம்சன் 15 ஓட்டங்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
இதனால், ராஜஸ்தான் அணி ஆரம்பத்திலேயே அதிக விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
இதன் பிறகு ரியான் பராக் மற்றும் அஸ்வின் ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டது. ரியான் பராக் நிதானமாக ஆடினார்.
அஸ்வின் 19 பந்துகளில் 29 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். பிறகு வந்த ஜூரெல் 12 பந்துகளில் 20 ஓட்டங்களைக் குவித்தார்.
20 பந்துப்பரிமாற்றங்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்காக ரியான் பராக் 45 பந்துகளில் 84 ஓட்டங்களைக் குவித்தார். ஹெட்மயர் 7 பந்துகளில் 14 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.
டில்லி அணி சார்பில் கலீல் அகமது, அக்சர் பட்டேல் , குல்தீப் யாதவ், முகேஷ் குமார் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிவரும் டில்லி அணி இதுவரை 5 பந்துப்பரிமாற்றங்களில் 2 விக்கெட் இழப்புக்கு 47 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.