கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவிலில் அப்பிரதேச மக்களால் மாவீரர் துயிலும் இல்ல வாயிலில் அமைக்கப்பட்ட வளைவை அகற்றப் பொலிஸார் தீவிரமாகவிருக்கின்றனர். எவருக்கும் எந்த இடையூறும் இன்றி, தானும் தன்பாடுமாக ஓரமாக இருக்கும் இந்த நுழைவாயில் வளைவு ஆபத்தானது என்று கூறி, நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. பொலிஸ் தரப்பு. எத்தனையோ சட்டவிரோதக் கட்டடங்கள், பொதுமக்களுக்கு இடையூறான கட்டடங்கள் ஆயிரக்கணக்கில் இந்த நாட்டில் இருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத பொலிஸார், பிரதேசமக்கள் ஒன்றிணைந்து அமைத்த ஒரு வளைவை அகற்றுவதற்கு வரிந்துகட்டிக் கொண்டு நிற்கின்றனர். தமிழ் மக்களின் உணர்வு களைச்சீண்டவே பொலிஸாரின் இந்தத் திருவிளையாடல்.
பௌத்த மேலாதிக்கச் சிந்தனையில்-நாட்டின் சிறுபான்மை மக்களின் உரிமைகளை மறுத்த கடந்த கால வரலாற்றுத் தவறுகளின் காரணமாக இலங்கைத் தீவு படுகுழியில் தள்ளப்பட்டது. இலங்கை சிங்கள - பௌத்த நாடு என்கிற பேரினவாத மனப்பாங்குடன் சிறுபான்மை மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகள்- சீண்டல்கள் பல தசாப்த போரை உண்டாக்கியது.
சிறுபான்மை மக்களுக்கான சுதந்திரத்தை- உரிமைகளை வழங்க மறுத்த அன்றைய பெரும்பான்மையின ஆட்சியாளர்களின் விரும்பத்தகாத நடவடிக்கைகளே ஆயுதப் போராட்டத்தை நோக்கிச் சிறுபான்மையினரைத் தள்ளின. பல தசாப்தகால அனுபவத்தின் பின்னரும் சிங்கள-பௌத்த மேலாதிக்க மனநிலையில் மாற்றங்கள் தென்படவில்லை. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தசாப்த காலத்துக்கு மேலாகியுள்ள நிலையில் நாட்டின் சிறுபான்மை மக்களான தமிழ் மக்கள் மீதான அழுத்தங்களும் அடக்குமுறைகளும் இன்னமும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. அரச இயந்திரத்தின் உதவியுடன் சிறுபான்மைத் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தமிழ் மக்களின் புராதன வழிபாட்டிடங்கள், பாரம்பரிய வாழ்விடங்கள் திட்டமிட்டு பௌத்த மயமாக்கப்படுகின்றன.
தமிழ்மக்களின் பண்பாட்டு வாழ்விடங்களையும், கலாசார வழிபாட்டு இடங்களையும் தொன்மை வாய்ந்த இடங்களையும் அழிப்பதற்கான முயற்சிகள் அரச பணிமனைகளின் அனுசரணை யுடன் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.
இவைபோதாதென்று, தமிழ் மக்களின் மனங்களில் அதியுன்னதமாகப் போற்றப்படும், ஆராதிக்கப்படும் நினைவுகளையும், நினைவுச்சின்னங்களையும் இருந்த இடம் தெரியாமல் சிதைப்பதையும் சிங்கள- பௌத்த பேரினவாதம், தன் கட்டாய நிகழ்ச்சி நிரலாகப் பின்பற்றுகின்றது. இதற்கான ஆகப்பிந்திய உதாரணமே, முழங்காவில் மாவீரர் துயிலுமில்ல வளைவை அகற்றுவதற்கான பொலிஸாரின் எத்தனம். அந்த வளைவால் இதுவரை ஒரு விபத்தேனும் நிகழவில்லை, சிறுமுரண்பாட்டுக்குக்கூட அந்த வளைவு வித்திடவில்லை, எவர் மனதையும் அந்த வளைவு புண்படுத்தவில்லை, எவரது பணத்தையும் அந்த வளைவு பிடுங்கவில்லை. மாறாக மக்களின் மனங்களில் ஆறாமல் இருக்கும் உளக் காயங்களுக்கு ஏதோவொரு வகையில் அந்த வளைவும் மருந்திடுகின்றது. இழந்துபோன, தொலைந்துபோன வீரயுகக் காலத்தை இரைமீட்கும் ஒரு கனவை அந்த வளைவு கொடுத்திருந்தது. அந்த அற்பமகிழ்வும் அதி காரத்துக்குப் பிடிக்கவில்லை. இப்போது 'வளைவால் ஆபத்து' என்று கூக்குரலிடத் தொடங்கியுள்ளது. தமிழ் மக்களைச் சீண்டி, அவர்களின் நிம்மதியைக் கெடுக்கும் கைங்கரியத்தை இப்போது முழங்காவிலிலும் அதிகாரம் ஆரம்பித்து விட்டது. தமிழ் மக்கள் மீதான இத்தகைய அழுத்தங்கள் - சீண்டல்கள் என்பன மீண்டும் நாட்டைப் பின்னோக்கியே இழுத்துச் செல்லும். தெற்கில் ஊறிப்போயுள்ள பௌத்த மேலாதிக்கச் சிந்தனை களையப்படும் வரையில் - சிறுபான்மை மக்களின் உரிமைகள் கிட்டும் வரையில் இலங்கை ஓர் அங்குலம் கூட முன்னோக்கி நகர முடியாது. இந்த நிதர்சனத்தை தெற்குத் தலைவர்களும், மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் சுபீட்சம் பற்றிப் பேசுவோர் முதலில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள்- சீண்டல்களைத் தடுத்து நிறுத்துங்கள். அதன் பின்னர் பேசலாம் நல்லிணக்கம் பற்றி...!
(05.04.2024-உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.