அரச தலைவர் தேர்தலை இலக்கு வைத்து தென்னிலங்கையின் பரப்புரைகள் ஆரம்பமாகிவிட்டன. அரச தலைவர் தேர்தல் என்றால் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைக் குறிவைத்து வலைகளை அவர்கள் விரிப்பது வழக்கம். தமிழர்களுக்கு அதைச் செய்வோம் இதைச்செய்வோம் என்று சொல்லி வாக்குகளைச் சுருட்டிக்கொண்டு 'அம்போ' எனக் கைவிடுவது தான் வழமையாக இருந்து வருகின்றது. இம்முறை தென்னிலங்கை அரச தலைவர் தேர்தல் களம் சற்று வித்தியாசமாகியிருக்கின்றது. தென்னிலங்கையின் வாக்குகள் தற்போதைய நிலையில் பிளவுறும் என்ப தால் யாருடைய வெற்றியும் உறுதியான நிலையில் இல் லை. எனவே இம்முறை தமிழ் மக்களின் வாக்குகள் தேவை என்ற நிலை உருவாகியிருக்கின்றது. தமிழ் மக்களோ, கடந்த கால கசப்பான அனுபவங்களின் அடிப் படையில் தமிழ்ப்பொது வேட்பாளர் தொடர்பிலேயே அதிகளவில் சிந்திக்கின்றனர். போரின் பின்னரான முன்னைய தேர்தல்களிலும் தமிழ் வேட்பாளர் ஒருவர் களமிறங்கியிருந்தாராயினும் தமிழ் மக்களின் ஒருமித்த நிலைப்பாடாக அது அமையவில்லை. ஆனால் இம்முறை அப்படியான நிலைமையில்லை. தென்னிலங்கையால் இனியும் ஏமாற்றப்பட முடியாதென்பதில் தெளிவாகவுள்ள மக்கள் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு உறுதியாக ஆதரவளிக்கக் கூடும்.
இந்த நிலையில் கடந்த காலங்களைக்காட்டிலும் இம்முறை தமிழ் மக்களின் வாக்குகளை தங்களுக்கு உறுதிப்படுத்திக்கொள்வதற்கு தென்னிலங்கை வேட்பாளர்கள் முயல்வார்கள். அதன் ஓர் அங்கமாக தேசிய மக்கள் சக்தியின் பெயரில் களமிறங்கும் ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாணம் பயணம் அமைந்திருந்தது.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட வடக்கு - கிழக்கு இணைப்பை நீதி மன்றத்தை நாடி பிரித்த பெருமை ஜே.வி.பி யையே சாரும். சமாதான ஒப்பந்தத்தை முறித்து நாட்டைப் போரை நோக்கி ஆட்சியாளர்களைத் தள்ள வைத்த கட்சியும் அதுதான். இறுதிப்போரின் போது மூர்க்கத்தனமாக அப்போதைய ஆட்சியாளர்களான ராஜபக்சக்களுக்கு ஆதரவளித்த கட்சியும் ஜே.வி.பி. தான். இப்படிப்பட்ட பின்னணியுடைய ஒரு கட்சி தனக்கு வாக்குக்கோரி இன்று வந்து நிற்கின்றது.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான காரணம் என்னவென்பதைத் தெரிந்தும் அதைத் தீர்ப்பதற்கு மனமில்லாமல் அந்தக் கட்சி இருக்கின்றது.
ஜே.வி.பி.யின் தலைவர் அநுர யாழ்ப்பாணத்தில் உரையாற்றும்போது, 'வடக்கு - கிழக்கு மக்களின் ஆணை இல்லாத ஆட்சி நாட்டை முன்னேற்றாது. ஆகையால் அனைத்து மக்களின் ஆணையுடனான ஆட்சி அமையப்பெறவேண்டும். அவ்வாறு இன,மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தலைவர்கள் எம்மை ஆதரிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.
இந்த நாட்டின் அரசமைப்பே வடக்கு - கிழக்கு மக்களின் சம்மதமில்லாமலேயே திணிக்கப்பட்டது. முதலில் வடக்கு -கிழக்கு மக்களின் ஆணையுடன் ஓர் அரசமைப்பை உருவாக்குங்கள். அதன் பின்னர் ஆட்சி அமைப்பதற்கு அந்த மக்களிடம் ஆணை கேட்கலாம். இதைச் செய்வதற்கு அநுரவுக்கு முதுகெலும்பு இருக்கின்றதா?
(07.04.2024-உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.