புதியவன்
எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடவுள்ளன. இந்நிலையில், இந்தத் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் இடம்பெற்றுள்ளார்.
கடந்த 2020 இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முகமது ஆமிர் அறிவித்தார். இந்தச் சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஓய்வு முடிவை கடந்த மார்ச் மாதம் திரும்ப பெற்றார்.
இந்நிலையில் நியூஸிலாந்துடனான ரி - 20 தொடரில் அவர் விளையாடவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 36 டெஸ்ட், 61 ஒரு நாள் மற்றும் 50 ரி - 20 போட்டிகளில் விளையாடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் மொத்தம் 259 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.
சூதாட்ட புகாரில் சிக்கி 5 ஆண்டுகள் தடையை எதிர்கொண்டார். இந்த ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ரி- 20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயற்பாடு காரணமாக அணித் தலைவர் பொறுப்பிலிருந்து பாபர் அசாம் விலகினார். இந்தச் சூழலில் அவர் மீண்டும் பாகிஸ்தான் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியில் இமாத் வாசிமும் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மையில் முடிந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உஸ்மான் கான், இர்ஃபான் கான் ஆகியோரும் நியூஸிலாந்து ரி- 20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.