யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விநியோகத்துடன் தொடர்புடைய மிகமுக்கியமான குழுவொன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் வலைப்பின்னல் தொடர்பில் முற்றுமுழுதான விசாரணைகளை நடத்திவருவதுடன், மேற்படி போதைப் பொருள் கடத்தல்காரர்களின் சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகள் என்பவற்றை முடக்கி, அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவும் பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதற்கான செயற்பாட்டு நடவடிக்கைகளிலும் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப் பாணத்தில் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு ஆட்படுவது சாதாரணமான விடயமாக இன்று மாறி விட்டது. சிறுவர்கள், யுவதிகள், இளைஞர்கள் என எல்லா வயதுப் பிரிவினரையும் - சமூகப் பிரிவு களையும் போதை மிக இலாவகரமாக இரையாக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. சமூகச் சீரழிவுகள், கலாசாரச் சீரழிவுகள் என போதையின் பிடியில் நின்று உழலும் இளைஞர்களையும், யுவதிகளையும் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்புகின்றபோதி லும், எந்தவொரு காத்திரமான முன்னேற்றமும் ஏற்பட்டதாகவில்லை. போதையைத் தடுப்ப தற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களை விட வும், போதை இளைஞர்களிடத்தில் பரவும் வேகமே அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மறுவாழ்வுக்குட்பட்டோர்கூட மீண்டும் மீண்டும் போதையின் பாதையில் பயணிக்கத் தலைப்படு வதையும் கண்முன்னே காணக்கூடியதாகவுள்ளது. ஏனெனில், மறுவாழ்வுக்கு ஒருவர் சென்று வந்தாலும், அவருக்கு மீண்டும் போதைப்பொருள் கிடைப்பதற்கு ஏதுவான அணுகல் நிலை சமூகத்தில் உயிர்ப்புடன் இருக்கும்போது எவ்வாறு மறு வாழ்வுத்திட்டம் வெற்றியளிக்கமுடியும்? போதைக்கு எதிரான நடவடிக்கைகள் எனப்படுபவை வேரில் இருந்து ஆரம்பிக்கப்படவேண்டி யவை. கண்ணுக்குத் தெரியும் கிளைகளை அகற்றுவதால் எந்தமாற்றமும் ஏற்படாது என்பதே உண்மை.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொர்க்கபுரியாக மாற்றம்பெற்று, நெடுங்காலம் ஆகிவிட்ட நிலையில், எவ்வளவுக்கெவ்வளவு சட்டம் இறுக்கப்படுகின்றதோ, தண்டனைகள் கடுமையாக்கப்படுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு போதையின் பாதை சுருங்கிச் செல்லும். ஆதலால், இதுவிடயத்தில் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டியவர்களாக பொலிஸாரே இருக்கின்றனர். எனவே, வழமையான கைது, விளக்கமறியல், மறுவாழ்வு என்ற செயற்றிட்டங் களுக்கு அப்பால், போதைப்பொருள் மாபியாக் களின் சொத்துகளை முடக்குவது, வங்கிக் கணக்குகளை முடக்குவது போன்ற நடவடிக்கைகளை 'யுக்திய' சுற்றிவளைப்பின்கீழ் செயற்படுத்துவது வரவேற்கத்தக்கதே.
எந்தவொரு நாட்டில் போதைப்பொருள் தலை விரித்தாடுகின்றதோ அங்கு மருத்துவத்துறைக்கான நிதியொதுக்கீடுகள் அதிகரிக்கும், பணம் தண்ணீ ராகச் செலவாகும், இதுவே யதார்த்தம். ஆதலால், இலங்கையில் கட்டற்று ஊடறுத்துத் திரியும் போதைப்பொருள், மருத்துவத்துறையை ஆட்டம் காணச்செய்வதுடன், கஜானாவையும் காலி செய்யும். அவ்வாறான நிலைமைக்குள் நாடு வீழ்வதற்கு முன்னர், போதைப்பொருள் மாபியாக்களை கூண்டோடு இல்லாதொழிப்பதுதான் நாட்டின் இருப்பும் எதிர்காலமுமாகும்...!
(08.04.2024-உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.