ஆயிரம் ரூபா வேதனமும் ஆவணப்படுத்தலும்!
ஆயிரம் ரூபா வேதனமும் ஆவணப்படுத்தலும்!

மலையக நடனக்கலையைப் பாதுகாத்து தொடர்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிசீலனை செய்வதற்காக தனிக்குழுவொன்று அமைக்கப்படவிருக்கின்றது. ஜனாதிபதி மாளிகையில் கண்டி பாரம்பரிய நடனக் கலைஞர்களுடனான சந்திப்பின் போது இந்த விடயத்தைத் தெரிவித்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில். கலைகள் நிச்சயம் ஆவணப்படுத்தப் பட வேண்டியவை. அதில் மாற்றுக் கருத்துக்கு இட மில்லை. ஆனால், அந்தக் கலைகளின் பிறப்பிடமான மலையக மக்களின் வாழ்வியலை வளப்படுத்த ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கத்தினரும் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்? என்ற கேள்வி எழுவது இங்கு தவிர்க்கப்பட முடியாததாகின்றதல் லவா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறுபான்மை மக்களின் வாக்குகளில் அதீத நம்பிக்கை கொண்டவர். முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதியென்பதால் சிறுபான்மை மக்களுடைய வாக்குகளுக்கு இருக்கும் பலம் அவருக்குத் தெரியும். தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்ததால் தனது ஜனாதிபதிக் கனவு முன்னொரு காலத்தில் சுக்குநூறாகக் கலைந்துபோனபட்டனுபவமும் அவருக்கு உண்டு. மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி, மைத்திரியை ஆட்சியேற்றிய சிறுபான்மை மக்களின் வாக்குகளின் மிடுக்கையும் அவர் அருகிருந்து உணர்ந்தவரே. ஆதலால், சிறுபான்மை மக்களை நோக்கிய அவரின் ஓட்டத்தை திடீர்ப்பாசத்தை புரிந்து கொள்வ தொன்றும் அவ்வளவு சிரமத்துக்குரிய காரியமல்ல. ஆனால், அந்த மக்கள் கூட்டத்துக்காக, தனது நீண்ட நெடிய அரசியல் பயணத்தில், சதியாட்டங்களைத் தவிர வேறொன்றையும் ரணில் செய்யவில்லை என்பதே கசப்பான மெய்.

சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரைக்கும் இலங்கை ஒரு சபிக்கப்பட்ட தேசம்தான். ஈழத்தமிழர் களுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இனப்படு கொலைகளைப் போன்று மலையக மக்களும் இந்தத் தீவில் காலம்காலமாக வஞ்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். இனப்படுகொலைகளுக்குப் பதிலாக அவர்கள் மீது 'பொருளாதாரப் படுகொலைகள்' அரசாங்கத்தாலும், அரச ஆதரவுபெற்ற 'கொம்பனிகளாலும்' ஏவப்பட்டன ஏவப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இடையிலான வேறுபாடு அவ்வளவே. மற்றும்படி இரு இனக்குழுக்களும் ஆலைவாய்க் கரும்பாக நெரிக்கப்பட்டுக் கொண்டிருப்பது 'பொதுமைப்பாடே'. ஆயிரம் ரூபா ஊதியத்தை வழங்குமாறு நெடுங்காலமாக மலையக மக்கள் (தோட்டத் தொழிலாளர்கள்) போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் கோரிக்கை இன்னமும் செவிசாய்க்கப்படவில்லை. 2020களில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதிருந்த பொருளாதார இயலுமையில் நாடு இப்போதில்லை. விலையேற்றங்கள் இடியாக இறங்கிக் கொண்டிருக்கின்றன. வற்வரியும் தன் பங்குக்கு வதைக்க ஆரம்பித் துள்ளது. மூன்றாண்டுகளுக்கு முற்பட்ட ஆயிரம் ரூபா ஊதியக்கோரிக்கைகூட முற்றுமுழுதாக இன்னமும் மெய்ப்பட்டபாடில்லை. இவ்வாறிருக்கையில் மலையக மக்களின் நடனத்தை ஆவணப்படுத்துவது ஒன்றுதான் மலையகத்தவர்களின் எதிர்பார்ப்பா? என்ற கேள்வியை பொதுப்புரிதலை- ரணில் அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

மலையக மக்களின் குருதியை அட்டைகள் மட்டும் உறிஞ்சவில்லை. அட்டைகளுடன் போட்டிபோட்டு பெருந்தோட்டக் ' கொம்பனிகளும் 'காலாகாலம் மாறி மாறி ஆட்சிக்குவரும் பேரினவாத அரசுகளும்தான் உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. தம்மைத் 'தேசிய இனமாக' அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் வாழ்வுரிமையையும், தமக்கேற்ற ஊதியத்தையும்தான் மலையக ம மக்கள் ரணில் அரசிடம் எதிர்பார்க்கின்றார்கள். இவை நிறைவேற்றப்படாமல் மேற்கொள்ளப்படும் எந்தவொருவெளி ஆரவாரங்களும் மலையகத்தின் ம உள்ளத்தை வெல்லப்போவதில்லை.

(08. 04.2024-உதயன் பத்திரிகை)

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

#editorial

360 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.