மருத்துவத் தவறுகளுக்கும் நீதியில் பாகுபாடா...
மருத்துவத் தவறுகளுக்கும் நீதியில் பாகுபாடா...

யாழ்ப்பாணத்தில் 'அக்குபஞ்சர்' சிகிச்சை மேற்கொண்ட நபரொருவர் உயிரிழந்ததையடுத்து, அந்த மருத்துவ நிலையத்தின் அனுமதியை ரத்துச்செய்வதாக அறிவித்துள்ளார் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவத் தவறால் ஒருவர் உயிரிழப்பது என்பது பாரதூரமான விடயமே. அத்தகைய மருத்துவ நிலையங்கள் மீதும், சிகிச்சை நிலையங்கள் மீதும் தடைவிதிப்பதானது தக்க நடவடிக்கையே. இதில் பாரபட்சங்களுக்கும், பரிந்துரைப்புகளுக்கும் இம்மியும் இடமில்லை தான். ஆனால், அனைத்து மருத்துவத் தவறுகளுக்கும் நீதி சமானமாக நடைமுறைப்படுத்துகின்றதா? என்று கேட்டால் அதற்குரிய பதிலைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு இருக்கவே செய்கின்றது.

மேற்படி அங்குபஞ்சர் நிலையத்தில் எடுத்துக்கொண்ட சிகிச்சையால் ஏற்பட்ட கிருமித்தொற்றால்தான் அந்த நபர் உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஆனால், இந்த உயிரிழப்புக்கு முன்பாக சுமார் 20க்கும் மேற்பட்ட நாள்கள் அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றார். மூன்று அல்லது நான்கு நாள்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற ஒரு நோயாளி இறந்தால், அந்த இறப்பில் பொறுப்புச் சொல்ல வேண்டிய 'தார்மீகக் கடமை' அந்தந்த மருத் துவமனைகளுக்கு இருக்கவே செய்கின்றது. இவ்வாறிருக்கையில் 20க்கும் மேற்பட்ட நாள்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று அதன் பின்னர் இறந்துபோன நோயாளியின் இறப்புக்கு அக்குபஞ்சர் மருத்துவமே காரணம் என்று முற்றுமுழுதாக விரல் நீட்டிவிடமுடியாது. அவ்வாறு அக்குபஞ்சர் மருத்துவம்தான் காரணம் என்றால், அதற் குரிய மருத்துவக் காரணிகளை மருத்துவத் தவறுகளை முறைப்படி குற்றஞ்சாட்டுகின்ற தரப்பினர் எண்பித்திருக்க வேண்டும். அப்படி எந்தவொரு தகவல்களையும் 'முறைப்படி' ஊடகங்களுக்குப் பகிரங்கப்படுத்தாமல் மக்களுக்குத் தெளிவுபடுத்தாமல், 'அக்குபஞ்சரில் ஏற்பட்ட மருத்துவத் தொற்றால்தான் இந்த இறப்பு சம்பவித்தது' என்று தெரிவித்துவிட்டுக் கடந்துபோகும் மனோநிலையால் வலிந்து ஏற்படுத்தப்பட்டுள்ள 'மருத்துவப் பதற்றம் மருந்தில்லா மருத்துவத்துக்கு எதிரான சதி நடவடிக்கையா? என்ற ஐயப்பாட்டை மக்களிடம் எழுப்பவே செய்யும்.

எல்லாவற்றையும்விட, இதே யாழ்ப்பாணத்தில் மேற்கத்தேய மருத்துவமுறைத் தவறால் தனியார் ஆங்கில மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.அந்த உயிரிழப்புகளுக்கு குறித்த மருத்துவருக்கின்றன அந்த குறித்த மருத்துவமாக எண்பிக்கப்பட்ட பின்னரும் இன்னமும் அந்த மருத்துவமனைகள் பெரும் சனத்திரளுடன் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டே இருக்கின்றன. அவற்றுக்கு ஏன் சுகாதாரத்திணைக்களம் தடைபோடவில்லை? ஆக, மருத்துவத் தவறால் இறப்புகள் சம்பவித்தாலும் அதில் ஆங்கில மருத்துவத்துக்கு ஒரு நீதியும், சுதேச மருத்துவத்துக்கு இன்னொரு நீதியும் நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்ற கேள்வி எழுகின்றதல்லவா..? மருத்துவத் தவறுகளை பத்துடன் பதினொன்றாகக் கடந்துவிட முடியாதுதான். ஆனால், ஆங்கில மருத்துவமாக இருந்தாலும் சரி, சுதேச மருத்துவமாக இருந்தாலும் சரி நீதி இறுக்கமாக, ஒரேவகையில் நடை முறைப்படுத்தப்படவேண்டும். இல்லாவிடில் சுகாதாரத்துறையின் நீதி, சுதேச மருத்துவத்தை விழுங்குவதற்காக, ஒடுக்குவதற்காக மட்டுமே பிரயோகிக்கப்படுகிறதா என்ற ஐயத்தை உறுதிசெய்வதாக அமைந்துவிடும்.

இவ்வளவு ஏன்.. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒரு பச்சிளம் பாலகி தன் கைகளை மணிக்கட்டுடன் இழந்திருந்தாளே. அதற்கு நீதி கேட்டு யாழ்ப்பாணமே கொதித்துப் போயிருந்ததே. அதற்கெதிராக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் இதுவரை எடுத்த நடவடிக்கைதான் என்ன? ஆக, மருத்துவத் தவறுகளுக்கும் மறுபக்க நீதியொன்று உள்ளதா...?

(10. 04.2024-உதயன் பத்திரிகை)

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

#editorial

250 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.