பட்டினியை வைத்து வாக்குப்பேரம்!!!!
பட்டினியை வைத்து வாக்குப்பேரம்!!!!

ஓய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் இப்படித்தான் இருக்கின்றது இலங்கையின் இப்போதைய பொருளாதாரநிலையும். 'நிதி நெருக்கடி குறைந்துவிட்டது. பொருளாதாரம் உயர்ந்துவிட்டது. எல்லோரும் கடன் தர முண்டியடிக்கிறார்கள், மக்களின் வாழ்க்கைத்தரம் சிறப்பாகவுள்ளது. திறைசேரி நிரம்பி வழிகிறது' என்று நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுவது போன்ற மாயையைச் சிருஷ்டிக்க ஆட்சியாளர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவையெல்லாமே கானல்நீர் போன்று எல்லோரையும் ஏமாற்றுகின்ற ஒரு பொய்யான விம்பமே. இந்தப் பொய்விம்பம் ஆட்சியாளர்களுக்கு அவசியமானது. தேர்தல் காலம் நெருங்கி வந்துவிட்ட சூழலில் தமது ஆட்சியால் நாட்டில் இருந்த பஞ்சமெல்லாம் பஞ்சு பஞ்சாகப் பறந்துபோய் விட்டதாக மக்களை நம்பச் செய்தால் மாத்திரமே அவர்கள் தங்கள் ஆட்சிக்கதிரையைத் தக்கவைக்கமுடியும். மாறாக, அவர்களால் நாடு நாசமாகி விட்டது என்ற உண்மையை மக்கள் உணர்ந்துகொண்டால், அதிகாரத்தில் இருப்போரின் பதவிக்கனவுகள் பகல்கனவாகவே மாறவேண்டியது தான்.

என்னதான் ரணில் தலைமையிலான அரசாங்கம், நாட்டில் எல்லாமே முன்னேற்றமடைந்து வருகின்றன என்று திரும்பத் திரும்பச் சொன்னாலும், தமக்கேற்ற வகையில் ரூபாவின் பெறுமதியைக் கூட்டிக் குறைத்துச் சித்து விளையாட்டுக் காட்டினாலும், உண்மைகள் ஏதோ ஒரு ரூபத்தில் வெளிப்படவே செய்கின்றன. உலகவங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையொன்றில், 'இலங்கையின் சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் பொருண்மியத்தில் நலிவுற்றோராக மாறிவிட்டனர்' என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இவ்வாறு ஒருநாட்டின் மொத்தச்சனத்தொகையில் 25 வீதமானோர் இவ்வாறு பொருண்மியத்தில் இழிநிலைக்குத் தள்ளப்படுவதென்பது நாட்டின் பொருளாதாரக் குறிகாட்டியின் மோசமான தன்மையே. இதைவிட உலகவங்கி வெளியிட்ட அந்த அறிக்கையில், '60 வீதமானோரின் வருமானம் சடுதியாகக் குறைவடைந்தும் விட்டது. சிறிய, நடுத்தர தொழிற் சாலைகள் மூடப்படுகின்றன. வாழ்க்கைச்செலவு உயர்ந் துள்ளது' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனிமேல் பொருண்மியத்தில் நலிவுற்றோரின் எண்ணிக்கை பலமடங்காக உயரும் சாத்தியங்களே தென்படுகின்றன. ஆட்சியாளர்கள் சொல்லிக்கொள்வது போல, இலங்கை மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவுமில்லை, பொருளாதாரம் நிமிரவுமில்லை என்பதையே பெருகிவரும் பொருண்மிய நலிவுக்குள்ளானோரின் எண்ணிக்கை கட்டியம் கூறுகின்றது. இன்னும் சொல்லப் போனால், மக்களின் இந்த அவலநிலைக்கு முழுக் காரணமும் ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறையே.

மக்களை ஏதுமற்றவர்களாக்கி, நடுத்தெருவில் விட்டு விட்டு, நாடு செழிப்போடு உள்ளது' என்று படங்காட்டு வதை எவருமே நம்பப்போவதில்லை. புள்ளி விவரங்களும், அறிக்கைகளும் மட்டுமே உண்மையின் உரைக்கல்லாக இருப்பதில்லை. கண்முன்னே உயிரோடு உலவும் மனிதர்களை விடவும் வேறு சிறந்த ஆதாரம் எதுவுமில்லை. நாலைந்து வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட இப்போது வாழ்க்கைச்செலவு பன்மடங்கு உயர்ந்த போதும், மக்களின் வேதனத்தில் உயர்வில்லை. இதனால் ஒவ்வொரு குடும்பமும் வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டித்தான் இலங்கையில் சீவிக்கமுடியும் என்ற நிலை தோற்றம் பெற்றுவருகின்றது. ஒருவேளை இப்படி மக் களை ஏதுமற்றவர்களாக்கிவிட்டு, பின்னர் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதைப் போல எதையேனும் கிள்ளித் தெளித்தால், திரண்டுவந்து எல்லோரும் ஆளும் தரப்புக்கே வாக்களிப்பர் என்று ரணில் விக்கிரமசிங்க கணக்குப் போட்டிருக்கிறாரோ என்னவோ. எரிகிற வீட்டில் சுருட்டைப் பற்றவைக்கக்கூடியவரல்லவா அவர். அதனால் இப்படி அவர் திட்டமிட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் மக்களைப் பட்டினிப் படுகுழிக்குள் தள்ளிவிட்டு, அந்தப் பசியை வைத்து வாக்கு பேரம் பேசும் எந்தவொரு அரசியல்வாதியும் வரலாற்றில் நிலைத்ததில்லை. வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி என்பர். அந்தக் கண்டிப்பான கிழவி ரணிலுக்கு என்னென்ன தீர்ப்பெழுதக் காத்திருக்கிறாளோ தெரியவில்லை.......

(12.04.2024-உதயன் பத்திரிகை)

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

254 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.