(ஆதவன்)
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கைபேசிகள், இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் பரீட்சை நிலையத்துக்குக் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்ட பொருள்களை எடுத்து வரக்கூடாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் பரீட்சையில் 4 இலட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
பரீட்சை தொடர்பாக நேற்றுக் கருத்துத் தெரிவித்தபோதே பரீட்சைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:- சாதாரண தரப்பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. பரீட்சை தாள்கள் அச்சிடுதல், பரீட்சை நிலையங்களுக்கான ஆளணி நியமனம், அவர்களுக்கான பயிற்சி போன்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
வடக்கில் தீவுப் பகுதி உட்பட சில விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும். கைதிகளுக்காக வெலிக்கடை சிறைச்சாலையில் பரீட்சை நிலையமொன்றும், மஹரகம மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறுபவர்களுக்காக அங்கு பரீட்சை நிலையமொன்றும், தங்காலை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிக ளில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பரீட்சை நிலையங்களும் இயங்கும்.
பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைத்ததும் அதை உரிய வகையில் சரி பார்க்க வேண்டும். பெயர், பாட எண்ணிக்கை, மொழிமூலம் போன்ற விடயங்களை கண்காணிக்கவும். தவறு இருப்பின் முன்கூட்டியே உரிய தரப்புக்கு தெரியப் படுத்தி சீர் செய்துகொள்ள வேண்டும். அதேபோல பாடசாலைகள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் மாணவர்களுக்கு அனுமதி அட்டையை வழங்கி, தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளவும். அதன் பின்னர் வேண்டுமானால் பாடசாலை சம்பிரதாயங்களுக்கு அமைய வழங்கலாம்.
பரீட்சை நிலையங்களுக்கு கையடக்கத் தொலைபேசி, இலத்திரனியல் உபகரணம் உள்ளிட்ட, பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள உபகரணங்கள் கொண்டுவரப்படுவது அதிகரித்துள்ளது. இம் முறை கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குப் பரீட்சை எழுத தடை விதிக்கப்படக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபடக் கூடாது -என்றார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.