(ஆதவன்)
நயினாதீவிலிருந்து யாழ். போதனா மருத்துமனை நோக்கிப் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் படகில் நடுக்கடலில் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது.
நயினாதீவைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவர் நயினாதீவு பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தீவுப் பகுதிக்கான அம்புலன்ஸ் படகுச் சேவை தற்போது நடைபெறாததால் அவர் சாதாரண படகிலேயே குறிகாட்டுவானுக்குப் பயணிக்க நேர்ந்துள்ளது.
படகில் கொண்டுவரப்பட்டபோது அவருக்குப் பிரசவ வலி அதிகரித்துள்ளது. அதையடுத்துப் படகில் இருந்த ஆண்கள் அனைவரும் படகின் மேல்தளத்துக்கு மாற்றப்பட்ட பின்னர், படகில் இருந்த பெண்களின் உதவியுடன் பெண்ணுக்குப் பிரசவம் பார்க்கப்பட்டுள்ள நிலையில், கர்ப்பிணிக்கு பெண் சிசு படகிலேயே பிறந்தது.
படகு குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு வந்த பின்னர், புங்குடுதீவு மருத்துவமனையின் அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு தாயும், சேயும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.