கிளிநொச்சியில ஒரு பள்ளிக்கூடத்தில கிட்டடியில பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு அங்க படிக்கிற பிள்ளையளின்ர பெற்றார் கட்டாயம் வரவேணும் எண்டு முதலே அறிவிச்சிருந்தவை. ஆனால் எல்லாருக்கும் கூட்டம் நடக்கிற அண்டு போக வசதியிருக்காதுதானே. வேற ஏதும் முக்கியமான அலுவல் இருந்தால் கூட்டத்துக்குப் போகமாட்டினம். அப்பிடி அந்தப் பள்ளிக்கூடத்தில 13 பிள்ளையளின்ர பெற்றார், அபிவிருத்திச் சங்கக் கூட்டத்துக்குப் போகேலை. அடுத்தநாள் பள்ளிக்கூடத்துக்கு அந்த 13 பிள்ளையளும் போக, பிரின்சிப்பல் அவையைக் கூப்பிட்டு, பள்ளிக்கூட போனில இருந்து கோல் பண்ணி அவையின்ர பெற்றாரை வந்து சந்திச்சால்தான் வகுப்புக்க விடுவன் எண்டிருக்கிறார்.
தங்கட பிள்ளை படிக்கிற பள்ளிக்கூடக் கூட்டத்துக்கு பிள்ளையில அக்கறை இருக்கிற பெற்றார் கட்டாயம் போயிருக்கோணும். சரி, அப்பிடிப்போக ஏலாட்டி அடுத்தநாள் பிரின்சிப்பல் கோல் பண்ணின உடன போய், என்ன காரணத்துக்காக வரேலை எண்டதை விளங்கப்படுத்தினால் விசயம் முடிஞ்சுது. அப்பிடி 12 பிள்ளையளின்ர பெற்றார் பள்ளிக்கூட போனில இருந்து கோல் எடுத்தவுடனேயே, பள்ளிக்கூடத்துக்கு வந்து தாங்கள் கூட்டத்துக்கு வராததுக்கு மன்னிப்புக் கேட்டு, கொப்பியில சைனும் வைச்சிட்டு போட்டினம். அவையின்ர பிள்ளையளும் வகுப்புக்கு போட்டினம். ஒரேயொரு பிள்ளையின்ர பெற்றார் மட்டும் பள்ளிக் கூடக்காரர் போன் பண்ணியும் வரேலை.
ஏனெண்டால் அந்தப் பிள்ளையின்ர அப்பா, வடக்கு மாகாணத்தில ஒரு முக்கியமான துறைக்குப் பொறுப்பா இருக்கிறார். அவருக்கு வேலை யாழ்ப்பாணத்திலை. அதால அவர் உடன போகேலாது. எண்டாலும் பிள்ளையின்ர அம்மாவாவது போயிருக்கலாமெல்லோ. இத்தனைக்கும் அவையின்ர வீடு பள்ளிக்கூடத்துக்கு முன்னுக்குத் தானாம். ஆனாலும் போகேலை. அப்பிடிப் போகாட்டிக் கூடப் பரவாயில்லை.
'நான் ஆரெண்டு தெரியுமோ? என்னெண்டு என்ர பிள்ளையை வகுப்புக்கவிடாமல் வைச்சிருப்பியள்? பொறுங்கோ. நான் சொல்ல வேண்டிய இடத்தில சொல்லி என்ன செய்யிறனெண்டு பாருங்கோ எண்டு வெருட்டியிருக்கிறார்.
வெருட்டினதோட நிக்காமல் கல்வித்திணைக்களத்துக்கும், வடக்குக்கு பொறுப்பா இருக்கிற மேலிடத்துக்கும் 'பள்ளிக்கூடத்தில பெரிய அநியாயம் நடக்குது. நிறையப் பிள்ளையளை வகுப்புக்கவிடாமல் வைச்சிருக்கினம். நியாயம் கேட்டால், ஆர் சொன்னாலும் அவையை விடமாட்டம் எண்டு பிரின்சிபல் சொல்லுறார். அப்பிடி மேலதிகாரிமார் இதில தலையிட்டால் பிரின்சிப்பல் வெளியில போடுவாராம்' எண்ட மாதிரி மேல்மட்டங்களுக்கு கொம்புசீவி விட்டிருக்கிறார் அந்தப்பிள்ளையின்ர அப்பா. அவர் பொறுப்பான பதவியில இருக்கிறதால, 'அவர் சொல்லுறதெல்லாம் சத்தியம்' எண்டு நம்பிக்கொண்டு, ரண்டு அதிகாரிமாரை அங்க போகச் சொல்லி வடக்கின்ர மேலிடத்தில இருந்து ஓர்டர் போயிருக்கு. அந்த அதிகாரிமார் போய்ப்பார்த்தால், அங்க எல்லாப் பிள்ளையளின்ர பெற்றாரும் வந்து சைன் பண்ணிட்டுப் போட்டினம் எண்டும், அவையின்ர பிள்ளையள் வகுப்புக்க போட்டினம் எண்டும் உண்மை வெளிச்சிருக்கு. தன்னட்ட அதிகாரம் இருக்கெண்டதுக்காக ஒரு பள்ளிக்கூடத்து கட்டுக்கோப்பை உடைக்க நினைக்கிறதும், தங்கட பிள்ளையின்ர நலனுக்காகக் கூட பள்ளிக்கூட மீட்டிங்குகளுக்கு போகாமல் திமிர் காட்டுறதும், பொய்க்குற்றச்சாட்டை சொல்லி பழிதீர்க்க நினைக்கிறதும் பொறுப்பான பதவியில இருக்கிற வைக்கு அழகில்லை கண்டியளோ.....
(22.03.2024- உதயன் பத்திரிகை)
93k3aw
c8pd2g
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.