இண்டைக்கு இரவு 8.15 க்கு குரோதி வருசம் பிறக்கப்போகுது. ஆனால் இந்த வருசம் ஒரே குழப்பமாத்தான் இருக்கப்போகுது. ஏனெண்டால் வருசமே ஒரு குழப்பத்திலதான் பிறந்திருக்குது. வருசப்பிறப்பைக் கொண்டாடுறது இண்டைக்கா நாளைக்கா எண்டதில எங்கடையாக்களிட்ட இப்பவும் குழப்பம் தான் உண்மையாவே இண்டைக்கு முன்னிரவே வருசம் பிறக்குது. ஆனால் சித்திரை மாதத்தின்ர முதலாம் நாள் நாளைக்குத்தான். இது சித்திரைப் புத்தாண்டு எண்டதால கனபேர் சித்திரை மாத முதல்நாளைத்தான் வருசமெண்டு கொண்டாடுகினம். இப்ப என்ன பிரச்சினையெண்டால், சித்திரைமாத முதல் நாளை வருசப்பிறப்பெண்டு கொண்டாடுறதா இல்லாட்டி குரோதி வருசம் பிறக்கிற நேரத்தை வைச்சு புத்தாண்டைக் கொண்டாடுறதா? எண்டதுதான்.
சனங்கள் தான் குழம்புகினம் எண்டு பார்த்தால், கலண்டர்களிலையும் ஏப்ரல் 13 ஆம் திகதியும் குரோதி வருசப் பிறப்பு எண்டு போட்டிருக்கினம், ஏப்ரல் 14 ஆம் திகதியும் அதே குரோதி வருசப் பிறப்பெண்டு போடுப்பட்டிருக்குது. அப்ப வருசம் ரண்டு நாளாப் பிறக்குதோ?
இது வருசப் பிறப்பில மட்டும் வாற பிரச்சினை இல்லை, சிவராத்திரி. தீபாவளி, நவராத்திரி எண்டு சைவசமயம் சார்ந்த எல்லா விசேச தினங்களிலையும் உந்தப் பிரச்சினை இப்ப அடிக்கடி வருகுது. அதுக்கு வாக்கிய பஞ்சாங்கத்தில ஒருமாதிரியும், திருக்கணித பஞ்சாங்கத்தில இன்னொருமாதிரியும் கணிச்சிருக்கிறதுதான் காரணமெண்டு சொல்லுகினம். சனத்துக்கு விரதங்கள், முக்கியமான தினங்கள் பற்றி வழிகாட்டத்தான் உந்தப்பஞ்சாங்கங்களைக் கணிக்கிறவை. ஆனால் இப்ப குழப்பத்தை வரவைக்கிறதுக்காகவே பஞ்சாங்கங்களைக் கணிக்கினமோ எண்டும் டவுட்டாக் கிடக்குது.
பஞ்சாங்கங்களில் ஏதும் குழப்பம் வந்தால் அதைத் தீர்த்து ஒரு பொதுமுடிவை அறிவிக்கிறதுக்கும் எங்களிட்ட இப்ப ஆக்கள் இல்லைப்போல.
இந்தமுறை முஸ்லிம்களின்ர நோன்புப் பெருநாளிலையும் ஒரு குழப்பம் . முதலில 11 ஆம் திகதி தான் ரமழான் பெருநாள் எண்டு இருந்தது. ஆனால் அதுக்கு முதலே பிறை தென்பட்டதால 10 ஆம் திகதிதான் நோன்புப்பெருநாள் எண்டு கொழும்புப் பெரிய பள்ளிவாசலில கூடின பிறைக்குழு அறிவிச்சது. அதைவைச்சு இலங்கையில இருக்கிற எல்லா முஸ்லிம்களும் முதலே திட்டமிட்டத்துக்கு முதல்நாளே - ஏப்ரல் 10 ஆம் திகதியே - ரமழானைக் கொண்டாடினவை.
ஏதும் தினங்கள் பற்றி குழப்பங்கள் வந்தால் அதைத் தீர்த்து பொதுவான ஒரு முடிவை எடுக்க கொழும்புப் பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு மாதிரி எங்களிட்ட ஒரு வலுவான அமைப்பு இல்லை. அப்பிடியும் ஏதும் குழு பொதுமுடிவை எடுத்தால் அதில ஆயிரம் நொட்டையள் பிடிச்சு அதை இன்னும் சிக்கலாக்கிறதுதான் எங்களுக்குத் தெரிஞ்ச ஒரேயொரு வேலை. இனியாவது உந்தப் பஞ்சாங்கக்காரரும் கதைச்சுப் பேசி சரியான தினங்களைப் பற்றி பொருத்தமான முடிவை எடுக்கோணும், அதைமாதிரி எல்லாச் சனமும் ஏற்று நடக்கக்கூடினமாதிரி பொதுமுடிவை எடுக்கிற வல்லமை கொண்ட அமைப்பையும் உருவாக்கவேணும். இல்லாட்டி ஒவ்வொரு வருசமும் இதே கூத்தாத்தான் இருக்கும் கண்டியளோ.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.