பட்சியைக் கண்டா அப்பிடியே பச்சையா பச்சடி போட்டுச் சாப்பிடுறளவுக்கு கனபேர் வெறிபிடிச்சு அலையினம், அந்தளவுக்கு பட்சியில 'பாசம்'. முந்த நாளும் பட்சிக்கு ஒரு ரெலிபோன் கோல். பலாலி எயார்போட்டில மாலையைக் கொண்டுபோக விடாமல் மறிச்சு, கடைசியா அதைப் பிய்ச்செறிஞ்ச விசயத்தை பட்சி வெளில கொண்டந்திட்டுதெல்லோ. அதைப்பற்றி கனபேர் கண்டபடி பேச, தங்கட வேலைக்கு ஏதும் பிரச்சினை வந்திடுமோ எண்ட பயத்தில, பலாலி எயார் போட்டில இருக்கிற தாவர தனிமைப்படுத்தல் பிரிவுக்குப் பொறுப்பா இருக்கிற அம்மணி பட்சியின்ர வாயை அடைப்பம் எண்டு கோல் எடுத்தவா.
''கொரோனாவுக்குப் பிறகு இப்பிடி தாவரமோ, தாவரம் சம்பந்தப்பட்ட பொருள்களோ கொண்டு வாறதெண்டால் அதுக்கு கனக்க சட்டதிட்டங்கள் இருக்கு. அவர் மாலையைக் கொண்டுவர வேணுமெண்டால் முதலே இஞ்ச அறிவிச்சு அனுமதி எடுத்துக்கொண்டு போயிருக்க வேணும். உலகம் முழுக்க இதுதான் ரூல்ஸ். உதெல்லாம் மாலையைக் கொண்டு வந்தவைக்கு தெரியாதோ? நீங்களும் ஆராயாமல் அதைப் போட்டது தவறெல்லோ" எண்டு மூச்சுவிடாமல் அந்த அம்மணி பொரிஞ்சு தள்ளினா.
அவா சொன்னதும் ஒருவகையில சரிதான். உலகம் முழுக்க இந்த ரூல்ஸ் இருக்குத்தான். தாவரங்களாலையோ இல்லாட்டி அதுகளின்ர விதையளாலையோ எந்தவொரு நாட்டுக்கும் புதுசா கிருமியள் ஏதும் தொத்தக் கூடாது எண்டதுக்குத்தான் உந்த ரூல்ஸ் இருக்கு. ஆனால் அந்த ரூல்ஸ் கனபேருக்குத் தெரியாது. அதால தான் இப்பிடியேதும் விதைகள், தாவரங்கள் கொண்டந்தால் அதை செக் பண்ணி . 'இதில பாதிப்பை ஏற்படுத்திற கிருமிகள் இல்லை' எண்டு ஒரு சேர்ட்டிபிக்கெட் குடுக்கத் தான் 'தாவர தனிமைப்படுத்தல்' பிரிவு எண்ட ஒண்டு இருக்கு. பூக்களுக்கு இந்தத் தனிமைப்படுத்தல் ரூல்ஸ் பொருந்துமோ? எண்டு கேப்பியள். எல்லாப் பூக்களுக்கும் உது பொருந்தாது. ஆனால் விதையுள்ள பூக்கள், இல்லாட்டி பூக்களால பரம்பலடையிற தாவரங்களுக்கு உந்த ரூல்ஸ் பொருந்தும்.
சரி இப்ப விசயத்துக்கு வருவம். அண்டைக்கு இந்தியாவால வந்தவர் விதையுள்ள பூக்களையோ இல்லாட்டி பரம்பலடையக்கூடிய பூக்களையோ கொண்டு கட்டின் மாலையைக் கொண்டு வரேல. அவர் கொண்டந்ததெல்லாம் மல்லிகை, ரோசாப்பூ இதுகளில கட்டின மாலை. அந்தப் பூக்களில விதையுமில்லை, அதுகள் பூவால பரவி முளைக்கிறதுமில்லை. அப்ப அந்த மாலையை அவை கொண்டு போக விட்டிருக்கலாம். அந்த விசயம் அவைக்குத் தெரியாட்டி ‘பூக்களையும் தனிமைப்படுத்த வேணும்' எண்டது மட்டும் தான் அந்தப் பிரிவில நிண்டவைக்குத் தெரியுமெண்டால், மாலையைச் சோதிச்சு, அதுக்குரிய காசை வாங்கிக் கொண்டு இதில கிருமி இல்லை' எண்ட சேர்ட்டி பிக்கெட்டை குடுத்து விட்டிருக்கலாமே. அதுக்குத்தானே அந்தப் பிரிவையே எயார்போட்டில வைச்சிருக்கினம். யாழ்ப்பாணம் பெரிய போஸ்ட் ஒப்பீஸிலையும் இதே மாதிரி ஒரு தாவர தனிமைப்படுத்தல் பிரிவு இருக்கு. பலாலி எயார்போட்டில நிக்கிறவை அங்கபோய் பார்த்தாலாவது எப்பிடி இந்த விசயத்தைக் கையாளவேணும் எண்டு கொஞ்சமாவது விளங்கும்.
தங்கட வேலைச்சுகத்துக்காக, ரூல்ஸை அரைகுறையா விளங்கிக் கொண்டு நடக்கிறவையாலதான் சனத்துக்கு கஷ்டம். பயணக்களைப்போட வாறவையிட்ட 'அதைக் கொண்டு போகாதை இதைக்கொண்டு போகாதை' எண்டு சீறிச்சினக்காமல், 'இதைச் செய்தால் கொண்டு போகலாம் எண்டு வழிகாட்டினால் பிரச்சினையேயில்லையே.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.