புதியவன்
வவுனியா, வைரவப்புளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த்திருவிழா புத்தாண்டு தினத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்த்திருவிழா வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.
வவுனியாவிலுள்ள முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகிய வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் திருக்கோவிலின் மகோற்சவப் பெருவிழா கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
மகோற்சவப் பெருவிழாவின் 9 ஆம் நாளான இன்று (14) தேர்த் திருவிழா மகோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ திவாகரக்குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆதிவிநாயகர் பெருமானுக்கு மேளதாள வாத்தியங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் இடம்பெற்று உள்வீதி வலம் வந்த ஆதிவிநாயகப் பெருமான், வெளி வீதியில் பிரவேசித்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து அடியவர்களுக்கு அருள்பாலித்ததுடன், பக்த அடியார்கள் சிதறு தேங்காய் அடித்தும், அங்கப் பிரதிஷ்டை செய்தும், கற்பூரச் சட்டி ஏந்தியும், ஆதிவிநாயகப் பெருமானை அரோகரோ கோசத்துடன் வழிபட ஆதிவிநாயகர் பெருமான் தேரில் வலம் வந்து அடியார்களுக்கு புத்தாண்டு தினத்தில் அருள்பாலித்தார்.
குரோதி வருடப்பிறப்பு தினத்தில் இத் தேர்த்திருவிழா இடம்பெற்றமையால் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த அடியவர்கள் விநாயகப் பெருமானை வழிபட்டதுடன் தமக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.